நிரஞ்சனாவின் 'நினைவுகள் அழிவதில்லை'


1940, பாரதம் ஆங்கிலேயர்களிடமும், விவசாயிகள் நிலப்பிரபுக்களிடமும் அடிமைப்பட்டுக்கிடந்த காலம். சிவப்புச் சிந்தனை சூறாவளி போல இளையோர்களிடமும், அடிமைப்பட்டுக்கிடந்த பாட்டாளிகளிடம் பரவிய காலமும் இதுவே. வடக்கு கேரளாவில் தேஜஸ்வினி நதிக் கரையில் அமைந்த கையூர்(தற்போது கண்ணனூர்) கிராமத்தில் நம்பியார், நம்பூத்ரி என்ற இரண்டு நிலப்பிரபுக்களிடம் தங்கள் உடைமைகளையும்,உழைப்பையும் அர்ப்பணித்து அடிமைகளாக வாழ்ந்து வந்தனர் கையூர் விவசாயிகள். அதே ஊரைச் சேர்ந்த அப்பு, அபுபக்கர், சிருகண்டன், குஞ்ஞம்பு ஆகிய நான்கு தோழர்கள் கம்யூனிஸ்ட் கொள்கையை தங்கள் போர்வாளாக ஏந்தி உழைக்கும் வர்க்கத்திற்கு ஊக்கத்தையும் விழிப்புணர்சியையும் தந்து, நிலப்பிரபுக்களின் சுரண்டலுக்கு எதிரான மூலகத்தையும், விவசாய எழுச்சி போராட்டங்களையும் நடத்தி வந்தனர்.

பாட்டாளிகள், பணம் படைத்தவர்முன் நின்று பேசவோ, ஏதிர்குரல் கொடுக்கவோ பயப்பட்டு வந்த காலத்தில் அப்பு, சிருகண்டன் தங்கள் மாஸ்டர் மற்றும் மார்க்சிஸ்ட் தோழர்களின் வழிப் பாதையை பின்பற்றி ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காக பெரிதும் பாடுபட்டனர். படிப்பறிவு குன்றிய விவசாய மக்களுக்கு மாலை நேரத்தில் நாளிதழ் வாசிப்பு பயிற்சி, பெரும் சுரண்டலை ஏதிர்த்து கேள்வி கேட்கும் திறன், சுயஉரிமைக்காக போராடும் மனோபாவம் முதலியவற்றை வித்திட்டனர். நம்பியாரின் சூழ்ச்சியால் சிருகண்டனின் விளைநிலத்தை அபகரிக்கப்பட்ட போதிலும் ஒட்டுமொத்த கையூர் விவசாயிகளின் அடிமைவிலங்கை விடுவிக்க அந்த இளம் வீரப்புரட்சியளர்கள், வீரமுழக்கமிட்டு விவசாயிகளின் விடுதலைக்காக போராடினர்.

நம்பியார், நம்பூத்ரியின் ஆதிக்கத்தையும் அக்கிரமத்தையும் எதிர்த்து நடந்த கையூர் விவசாய சங்கத்து ஊர்வலத்தில், ஆளும் வர்க்கத்தைச் சார்ந்த சுப்பய்யன் என்ற போலீஸ் கான்ஸ்டபிள் மாப்புடன் ஊர்வலத்தை தடுக்க முற்பட்டு, அதனால் கொதித்தெழுந்த விவசாயிகள் அவனுடன் கைகலப்பில் ஈடுப்படுகின்றனர். தன்னை காப்பற்றிக் கொள்ள தேஜஸ்வினி ஆற்றில் குதித்து கரை சேரமுடியாமல் உயிர்விடுகிறான்.

சுப்பய்யனின் இறப்புக்கு கம்யூனிஸ்ட் தோழர்களான அப்பு, அபுபக்கர், சிருகண்டன்,குஞ்ஞம்பு சம்மந்தமில்லாத போதும் குற்றம் சாட்டப்பட்டு தூக்குத் தண்டனை பெற்றனர். உலக மற்றும் இந்திய மக்களின் எதிர்ப்பையும், வேண்டுகோளையும் புறக்கணித்து விட்டு பிரிட்டிஷ் ஏகாதிபத்திய அரசும் மற்றும் நிலப்பிரபுக்களும், 25-தே வயதுக்குட்பட்ட நான்கு கம்யூனிஸ்ட் இளந்தளிர் தோழர்களின் தூக்குத் தண்டனையை நிறைவேற்றியது. வீரம் விளைந்த கையூர் தியாகிகளின் வீரம் மிக்க போராட்ட சம்பவத்தையும், உயிர்த் தியாகத்தையும் அடிப்படையாக கொண்டு எழுதப்பட்ட புனைவு தான் இந்த "நினைவுகள் அழிவதில்லை" நாவல்.

- 1954-ல் பிரபல கன்னட எழுத்தாளர் நிரஞ்சனா கலை ஏண்ணத்தில் உருவான "சிரஸ்மரணா" என்ற மூலநாவல் பிற்பாடு மலையாளத்தில் மொழிப் பெயர்க்கப்பட்டு, 1977-ல் திரு பி.ஆர். பரமேஸ்வரன் அவர்களால் மலையாளத்தில் இருந்து தமிழாக்கம் செய்யப்பட்ட இந்நூல் 2008 வரை ஒன்பது பதிப்புகளை கண்டுள்ளது.

- 1943-ல் கையூர் சம்பவம் நடந்த போது நிரஞ்சனாவின் வயது 7.

- மலையாள மண்ணில் நடந்த சம்பவத்தை கன்னடத்தில் கதையாக்கி மொழிக்கடந்து கன்னட மக்களை உலுக்கிய நிகழ்வுகள் பல உண்டு.

- "The Hindu" நாளிதளின் ஆசிரியர் என்.ராம் மற்றும் பல தோழர்களின் தூண்டுதலால் திரு பி.ஆர். பரமேஸ்வரன் அவர்களால் 1975-77 அவசர காலத்தில் தலைமறைவிலிருந்தபோது தமிழாக்கம் செய்யப்பட்ட நாவலிது.

- இந்தக் கதை, லெனின் ராஜேந்திரன் இயக்கத்தில் மலையாளத் திரைப்படமாக வெளிவந்துள்ளது.

இந்நூல் கம்யூனிஸ்ட் பிரச்சார நூலாக இல்லாமல், ஒரு தலைச்சிறந்த இலக்கிய படைப்பாக அமைந்திருப்பது இதன் சிறப்பு. என் வலைப்பூவில் பகிர மட்டுமே செய்யும் நான் இந்த தேர்ந்த இலக்கிய படைப்பை மறவாது வாசித்து, பல்லாயிரம் மக்கள் வாசிக்கவும் உதவுங்கள் என்பது பதிப்பாளர் மற்றும் எனது வேண்டுகோள்.

இந்த நாவல் வாசிப்பின் முடிவில் கையூர் தியாகிகளின் வீரமும், நிலப்பிரபுக்களின் ஆதிக்கத்தையும் எதிர்த்து போராடி தங்கள் உயிரை தியாகம் செய்த தோழர்களின் நினைவு அழியப்போவதுமில்லை, வாசித்தவர்கள் மனதைவிட்டு நீங்கப்போவதுமில்லை.

நினைவுகள் அழிவதில்லை - நிரஞ்சனா (தமிழில் பி.ஆர். பரமேஸ்வரன்), சவுத் விஷன் வெளியீடு , ரூ..60.00

The Page Turner


பத்து வயது நிரம்பிய மெலின்க்கு(Mélanie) பியானோ வாசிப்பதில் மிகுந்த ஈடுபாடு. அவளின் பெற்றோர் கசாப்பு கடை நடத்துபவர்கள். எந்த ஒரு இசை பின்புலத்தில் வளராத மெலின்க்கு பியானோ வாசித்தல் இயற்கையளித்த பரிசு போல, தன் உயிர்நாடியாக நேசிக்கிறாள்.

கன்செர்வடோரி நுழைவுத் தேர்வில் வெற்றி பெருவதற்காக தன்னை முழுமையாக ஆயத்தப்படுத்திக்கொள்கிறாள். தேர்வு நடக்கும் முதல் நாள் இரவில் தன் தந்தையிடம், தான் தேர்வில் வாசிக்கும் இசையை வாசித்துக்காட்டி தன் தந்தையை லயத்தில் மிதக்கவைகிறாள். தன் மகளின் ஆர்வத்திற்கு பங்கம் வரக்கூடாது என்பதற்காக, தேர்வில் எந்த முடிவு வந்தாலும் ஏற்றுக் கொள்ள வேண்டுமென்று கூறுகின்றார். ஆனால் அவளோ அப்படி ஏதாவது நடந்தால் பின் வாசிப்பதையே நிறுத்திவிடுவதாக பதிலளிக்கிறாள்.

தேர்வாளர் குழுவில் நடுவராக இருக்கும் அரியானே பௌசெகுர்ட்(Ariane Fouchecourt) மிக
பிரபலமான பியானிஸ்ட் பல மேடை நிகழ்ச்சிகளை அரங்கேற்றியவர். தேர்வாளர்கள் முன் தன் இசையை வாசிக்கும் மெலின், அரியானேவின் முன்யோசனையற்ற நடத்தையினால், தான் வாசித்துக் கொண்டும் இருக்கும் இசையை முழுமையாக வாசிக்க முடியாமல் தடையுற்று தேர்வில் தோல்வியுருகிறாள். வெற்றியை மட்டுமே தன் இலக்காக எண்ணிய மெலினுக்கு, தோல்வியை ஏற்றுக்கொள்ள அவளின் மனது மறுக்கிறது. தனக்கு ஏற்பட்ட கோபத்தை வெளிப்படையாக கட்டாமல் நீங்கா வடுவாக மனதில் புதைத்து வைக்கிறாள். தான் முடிவு செய்தது போல பியானோ வாசிப்பதையும் நிறுத்திவிடுகிறாள்.

காலம் பல கடந்தோட, வடுபட்ட மனதோடு வளர்கிறாள் மேலின். பியானோ வாசிப்பதை விடுத்த மேலின் பிரபலமான வக்கீல் அலுவலகத்தில் பணிக்கு சேருகிறாள். அங்குதான் தன் வாழ்க்கைப் போக்கை மாற்றிய அரியானேனின் கணவனான ஜீன்(jean)-னை சந்திக்கிறாள். ஜீன் சில காலம் வெளியூர் செல்வதால் தன் மகன் த்ரிஸ்டன்(tristan)-யும், தன் அன்பான மனைவி அரியானேனையும் கவனித்துக் கொள்ள ஒரு செவிலித்தாய் தேடுவதாக தன் மூத்த பணியாளர் மூலமாக அறிகிறாள் மேலின். ஜீனிடம் அப்பணியை செய்வதற்கு தன் சம்மதத்தை தெரிவிக்கிறாள். மேலினை தன் வீட்டிற்கு அழைத்துச் சென்று, தன் வீட்டைச் சுற்றி காட்டியவாரு தன் அன்பான மனைவி அரியானேனை பற்றியும் சிறு தகவல்களை கூறுகிறான். அரியானே ஒரு தேர்ந்த பியானிஸ்ட் என்றும், சில காலம் முன் கார் விபத்தினால், எந்த செயல் செய்வதற்கும் பயப்படுகிறாள் என்றும், எப்பொழுதும் ஒரு துணை வேண்டுகிறாள் என்று கூறி அரியானேனையும், த்ரிஸ்டனையும் அறிமுகப்படுத்துகிறான் ஜீன் .

மேலின் அமைதியாகவும், பொறுமையுடன் தன் பழிவாங்கள் செயலில் ஈடுபடுகிறாள். விளையாட
ஆளில்லாத த்ரிஸ்டனிடம் தோழமையுடன் பழகி அவனின் அன்பைப் பெறுகிறாள். மேலும் அவனுக்கு பியானோவில் புதிய இசையையும் கற்றுத்தருகிறாள். ஒருநாள் அரியான் தன் மேடை நிகிழ்ச்சிக்காக பியானோவில் ஒத்திகை பார்க்கும் பொழுது, அவளின் இசைக்கு ஏற்றவாறு இசைப் புத்தகத்தின் பக்கங்களை திருப்புகிறாள் மெலின். தனக்கும், மெலினுக்கும் பியானோ வாசிப்பில் ஒத்த சிந்தனை இருப்பதை எண்ணி தனக்கு முழுநேரப் பேஜ் டேனராக(Page Turner) இருக்க வேண்டுகிறாள். அதற்கு மெலின் சம்மதமும் தெரிவிக்கிறாள்.

அரியானிடம் நெருங்கிப் பழகும் மெலின், ஒரு கட்டத்தில் அவளில்லாமல் தன் ஒரு அணுவும் இயங்காது என்று முடிவுக்கு வருகிறாள். மெலின் தன் திட்டத்தின் உச்சக்கட்டமாக அரியானை தன்மேல் காதல் வயப்படவைக்கிறாள். இதற்கிடையில் மெலின் தன் பணிக்காலம் முடிவடைந்து தன் ஊருக்குச் செல்ல தயாராகுகிறாள். அவ்வீட்டை விட்டு போகும்போது அரியானேவின் வாழ்க்கைக்கு பெரும் பூகம்பத்தை ஏற்படுத்திவிட்டு செல்வது போல படம் நிறைவுபெறுகிறது.

நான்கு கதாப்பாத்திரத்தை சுற்றி எடுக்கப்பட்ட படம், நான்கில் மெலின் கதாபாத்திரம் அனைவரின் மனதையும் கொள்ளைக் கொள்கிறது. அழகான நீண்ட தங்கநிறக் கூந்தல், உடலுக்கு பொருத்தமான மேலங்கி, பணிவான நடத்தையில் சூழ்ச்சி, தவறில்லாத பழிவாங்குதல் முறை என்று தன் பாத்திரத்தை நிறைவாக நடித்துள்ளார் தேபோராஹ் பிரான்கோயிஸ்(Déborah François) .

இப்படம் 2006-ம் ஆண்டு வெளிவந்த பிரெஞ்சு திரைப்படம். இதை இயக்கியவர் டெனிஸ் தேர்குர்ட் (denis dercourt). 2007-ம் ஆண்டின் சிறந்த நடிப்பு, இசைக்கான செசார் (César) விருதுகளுக்குப் பரிந்துரைக்கப்பட்ட படம்.